தாஜ்மகாலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இன்னும் 5 ஆண்டுகளில் அது இடிந்து விழுந்து விடும் என்றும் அண்மையில் பரபரப்பாக செய்திகள் வெளியாகியது. உள்ளூர் எம்.பி ராம்சங்கரையும் மேலும் ஒரு வரலாற்று ஆய்வாளரையும் மேற்கோள் காட்டியே இங்கிலாந்து செய்தித்தாள் ஒன்று இச்செய்தியை ஆரம்பத்தில் வெளியிட்டது. உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் தாஜ்மகாலுக்கு ஆபத்து என்ற செய்தி அறிந்த சமூக ஆர்வலர்களுக்கு மத்தியில் இது பெரும் விவாதத்தை எழுப்பியது. இந்நிலையில் இச்செய்தியை தொல்பொருள் துறை மறுத்துள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் தெரிவிக்கும் போது, “எங்களால் தாஜ்மகால் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு எந்த விரிசலும் இல்லை. அங்குப் பதிக்கப்பட்டுள்ள மரங்கள் எதுவும் உளுத்துப் போகவும் இல்லை. தாஜ்மகால் எந்த ஆபத்தும் இல்லாமல் பலமாகவே உள்ளது. இது வெறும் வதந்தியே. விசமிகள் யாரோ தான் வதந்தியைப் பரப்பியுள்ளார்கள்” என்று தெரிவித்தனர்.












